வியாழன், 21 நவம்பர், 2013

நோயல்ல.. குறைபாடே..! - "ஆட்டிசம் சில புரிதல்கள்" புத்தக விமர்சனம் - கல்கியில்..

யெஸ் பாலபாரதியின் "ஆட்டிசம் சில புரிதல்கள்" நூல் குறித்த எனது விமர்சனம் 24 நவம்பர் 2013 கல்கியில்..
 நன்றி கல்கி!
சற்றே விரிவாகப் பார்ப்போம் இங்கே...

டப்பு ஆண்டில் 88-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ள நம் நாட்டில் பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத சூழலே நிலவுகிறது.

‘மனநிலை பாதிப்பு வேறு, ஆட்டிசம் வேறு என்கிற தெளிவுகூட நம்மவர்கள் மத்தியில் இல்லை’ என வருத்தபடுகிற, எழுத்தாளரும் ஊடகவியலாளருமான நூலாசிரியர் யெஸ். பாலபாரதி, ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் அவர்தம் பெற்றோர்கள் நலன் கருதி விரிவாக அலசியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே “ஆட்டிசம் சில புரிதல்கள்”!

பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரிவரப் பயன்படுத்த முடியாததால் இயல்பான நடவடிக்கைகளில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் ஆட்டிசம், ஒரு குறைபாடுதானே தவிர நோயல்ல எனத் தெளிவு படுத்துகிறது நூல். ஐந்து வயதை எட்டினால்தான் இக்குறைப்பாட்டை அடையாளம் காணவே முடியும் என்று சொன்ன அதே மருத்துவ உலகம் விரைவாக அடையாளம் காண்பதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தந்திருக்கிறது. எவ்வளவு சீக்கிரமாக பாதிப்பைக் கண்டு கொள்கிறோமோ அத்தனை சீக்கிரத்தில் சரியான பயிற்சிகளைத் தொடங்குவதன் மூலமாக நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிவதோடு, முற்றிலுமாகவே ஒழுங்குபடுத்திடும் வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

ம்மைச் சுற்றியிருக்கும் எந்த குழந்தையானாலும் அவர்களிடம் ஆட்டிசம் இருக்கிறதா என அடையாளம் காண்பதன் மூலம் அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்குகிறோம். இதை நூலின் முக்கிய நோக்கமாகவே கருதி, இருபது வழிகளையும் படங்களுடன் வாசிப்பவர் மனதில் நிறுத்துகிறது நூல். அவற்றில் சில: ஒதுங்கி இருப்பது; பொருத்தமின்றி பொருட்களைப் பற்றுவது; கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது; மற்ற குழந்தைகளுடன் பழக ஆர்வம் காட்டாமை; தொடப்படுவதை, அணைக்கப்படுவதை விரும்பாமலிருப்பது; அச்சம் ஆபத்தை உணராதிருப்பது; ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது; சில செயல்களைச் சரியாகச் செய்தாலும் சமூகப் புரிதலற்று இருப்பது; மாற்றங்களை அசெளகரியமாய் உணருவது; வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாதிருப்பது; தேவைகளை உணர்த்தப் பெரியவர்களைக் கைபிடித்து அழைத்துச் சென்று காட்டுவது; அதீதப் பதட்டம்; காரணமற்ற அழுகை, சிரிப்பு; குதிப்பது, கைகளைத் தட்டுவது; வலியை உணராதிருப்பது, சுழலும் பொருட்களை இரசிப்பது, அதிலேயே ஆழ்ந்து போவது; சுட்டுவிரலால் சுட்டிக்காட்டத் தெரியாதது; பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பாராமல், காது கேளாதது போலிருப்பது போன்றன.

ஆட்டிசத்தின் வரலாறு, ஸ்பெக்ட்ரம் டிஸார்டர், எது சரி எது தவறு, சென்சரி பிரச்சனைகள், சிகிச்சை முறைகள், குழந்தைகளைக் கையாளும் முறை, பெற்றோர்/கவனிப்போரின் பங்கு, பத்தியங்கள்,ஒவ்வாமைகள் எனப் பல தகவல்களை ஆங்கில நூல்களிலிருந்தும், இணையத்திலிருந்தும் ஆய்வு செய்து மட்டுமேயன்றி நேரடியாக மருத்துவர்களையும், தெரபிஸ்டுகளையும், பாதிப்புக்குள்ளான பெற்றோரையும் சந்தித்துப் பேசி அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்புடனும் தயாரித்திருக்கிறார் யெஸ்.பாலபாரதி கட்டுரைகளை.

ங்கள் குழந்தைகள் குறித்து பெருமையடையுங்கள், நாட்கள் ஓடுவதைக் கண்டு கவலை கொள்ளாதீர்கள், தேவையற்ற குற்றவுணர்வைத் தவிர்த்திடுங்கள், உங்களை நீங்களே நம்புங்கள், வாழ்வை அதன் போக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்’ போன்ற ஆலோசனைகள் உட்பட ஜீன் அவிரம் (Jene Aviram) எனும் மேலை நாட்டவர், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தையின் பெற்றோருக்குத் தந்திருக்கும் பத்துகட்டளைகளையும் தமிழில் தந்திருப்பது  நம்பிக்கையை விதைக்கிறது. அத்துடன் நின்றிடாமல், தங்கள் குழந்தையின் எதிர்காலம்  குறித்துக் கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கிற பெற்றோரின் நிலை குறித்து சங்கடப்படுகிற ஆசிரியர்  அப்படி சோர்ந்து போகத் தேவையில்லை என்பதற்காக ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொண்டாலும் உலகின் பார்வைத் தம் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றிச் சொல்லி மேலும் நம்பிக்கையூட்டியிருக்கிறார்.

இந்நூல், தங்கள் குழந்தை ஆட்டிசத்தால் பாதிப்புக்குள்ளானதையே உணராமலிருக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோரில் ஒருவருக்கேனும் மட்டுமின்றி, சாதாரணக் குழந்தைகளின் பெற்றோருக்கும் ஆட்டிசக் குழந்தைகளைப் புரிந்து கொள்ள, ஒதுக்காமல் இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்ய, அவர்களது உரிமைக்காக வாதிட..,  துணை நிற்குமானால் உள்ளபடி மகிழ்வேன் என்கிறார் நூலாசிரியர்.
*

ஆட்டிசம் சில புரிதல்கள்
பக்கங்கள்:80 விலை.ரூ.50
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம் (அனைத்து கிளைகளிலும்).

தொலைபேசி எண்கள்: 044 24332424, 24332924, 24339024.
**

24 கருத்துகள்:

  1. நல்லதொரு நூலைப் பற்றி சிறப்பான விமர்சனம்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    நூல் பற்றிய விமர்சனம் நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. இன்றைய மிக முக்கியமான பிரச்சனை தான் இது என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.

    பயனுள்ள புத்தகம் ஒன்றைப்பற்றிய மிகவும் பயனுள்ள விமர்சனம்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு புத்தகம் பற்றிய விமர்சனத்துக்கு நன்றி அக்கா...

    பதிலளிநீக்கு
  5. மிக நல்ல தூல்,விமர்சனமும் அருமை.
    //நம்மைச் சுற்றியிருக்கும் எந்த குழந்தையானாலும் அவர்களிடம் ஆட்டிசம் இருக்கிறதா என அடையாளம் காண்பதன் மூலம் அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்குகிறோம்.//
    நல்ல நோக்கத்திற்காக எழுதப் பட்ட நூல், நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
    பாராட்டுக்கள் ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. விழிப்புணர்வை ஏற்படுத்தும் அருமையானதோர் நூலைப் பற்றிய அழகான விமர்சனம். ஆட்டிசம் பற்றிய புரிந்துணர்வை இந்த நூல் நிச்சயமாக நம் மக்களிடையே ஏற்படுத்தும்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல விஷயம். அருமையான விளக்கம் ராமலெக்ஷ்மி. வாழ்த்துக்கள் கல்கியில் வந்தமைக்கு

    பால பாரதிக்கும் வாழ்த்துக்கள் இப்படி ஒரு நூலைப் படைத்தமைக்கு.

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு நூல் விமர்சனம்....

    கல்கியில் வெளிவந்தமைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம், இதழில் வெளிவந்த விவரத்தை அறியத் தந்ததற்கும், FB-ல் பகிர்ந்து கொண்டதற்கும்.

    பதிலளிநீக்கு
  10. மிக அருமையான விமர்சனம். கல்கியில் வெளிவந்தமைக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான பகிர்வுக்கா...நல்லதொரு விழிப்புணர்வு விமர்சனத்திற்க்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  12. நிறையப் பேருக்கு இது பற்றி தெரியவில்லை.. இதில் இன்னொரு பிரச்சனை பாதிக்கப்பட்டவர் / குழந்தை இந்த குறைபாடால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், பார்க்கிறவர்களுக்கு மன நிலை பாதிக்கப்பட்டது போல தெரியும். இது சிக்கலான விஷயம் தான்.

    பெற்றோர் மன உறுதியுடன் இருந்தால் மட்டுமே இதை சரியான வழியில் கொண்டு செல்ல முடியும்.

    ஆய்வுகள் தற்போது ஆட்டிசம் அதிகரித்து வருவதாக கூறுகின்றன. இது எதனால் என்று புரியவில்லையே!

    பதிலளிநீக்கு
  13. @கிரி,

    நன்றி கிரி.

    உண்மைதான். பெற்றோருடன் சமூகமும் அவர்களுக்கு ஒத்துழைக்க விழிப்புணர்வு மிக அவசியமாகிறது.

    சமீபத்திய ஆய்வுகள் குறித்து நானும் சில பத்திரிகைகளில் வாசித்தேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin