வியாழன், 31 டிசம்பர், 2009

சில ஸ்தலங்கள்.. சில படங்கள்.. பலப்பல நன்றிகள்..!

என் எழுபத்தைந்தாவது பதிவு. நான் பதியும் வேகத்துக்கு சதம் காண இன்னும் எவ்வளவு காலமாகும் எனத் தெரியாததாலே முக்கால் சதம் முடித்ததையும் முன் வைக்கிறேன்:)!

இந்த ஆண்டிலும் என் கூடவே வந்து வாசித்து கருத்து சொல்லி ஊக்கம் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

இருதினம் முன்னே என் பிறந்த தினத்தன்று பதிவிட்டு வாழ்த்திய ஆனந்த், தமிழ் பிரியன், ஆயில்யன், முத்துலெட்சுமி மற்றும் வல்லிம்மாவுக்கும் தொடர்ந்து வாழ்த்தியிருந்த அத்தனை பேரின் அன்புக்கும் நெகிழ்வுடன் இங்கும் என் நன்றிகள்!

எழுதும் நம்மை பலரிடம் கொண்டு சேர்த்து வரும் திரட்டிகளான தமிழ்மணத்துக்கும் தமிழிஷுக்கும் நன்றிகள். ஆறு மாதங்களுக்கு முன்னர் தமிழிஷில் இணைந்தேன். வாக்களித்து தொடர்ந்து அங்கு பதிவுகளை 'பிரபல படைப்புகள்' ஆக்கிய அனைவருக்கும் நன்றிகள்! தமிழ்மணத்தில் பரிந்துரைத்தவர்களுக்கும் நன்றிகள்!

இவ்வருடத்தில் என் படைப்புகள் பலவற்றை வெளியிட்டும், பதிவுகள் சிலவற்றை குட்ப்ளாக்ஸ் பிரிவில் பரிந்துரைத்தும் உற்சாகம் தந்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றிகள்!

வார்ப்பு கவிதை வாராந்திரியில் தொடர்ந்து கவிதைகள் வெளிவருவதும்; கலைமகள், வடக்கு வாசல், இலக்கியப்பீடம் ஆகியவற்றில் தடம் பதிக்க முடிந்ததும்; தேவதையில் வலைப்பூ அறிமுகமானதும் கூடுதல் மகிழ்ச்சி.

சென்னைப் புத்தகத் திருவிழாவையொட்டி இந்த வாரம் ஆதிமூலகிருஷ்ணன் பதிவர்களைக் கண்ட தொடர் பேட்டியில் எனது பங்களிப்பு இங்கே. அனைவரது பேட்டியும் ஒருதொகுப்பாக இங்கே. நன்றி ஆதி!


PiT போட்டிகளுக்கு மட்டுமேயென புகைப்படப் பதிவுகள் தந்து வந்த நான் 'தேவதை' தந்த உற்சாகத்தில், அவர்கள் சிலாகித்திருந்த ‘பேசும் படங்கள்’ எனும் தலைப்பிலேயே அவ்வப்போது புகைப்படங்களைப் பகிர்ந்து வர எண்ணியதின் முதல் கட்டமாக சில மாதங்கள் முன்னர் சென்றிருந்த ஸ்தலங்களின் படங்கள் பார்வைக்கு...

படங்கள் கணினித்திரையை விட்டு வெளியேறித் தெரிந்தால் please click view-zoom-zoom in! [குறிப்பாக இத்தகவல் திவா அவர்களுக்காக:)!]

மதுரை மீனாக்ஷி சுந்தரேஷ்வரர்


வானுயர்ந்த கோபுரமும்
தரணி போற்றும் பொற்றாமரைக் குளமும்




தகதகக்கும் தங்கத் தாமரை







மதுரை கூடலழகர்
நெடிந்துயர்ந்த தங்கஸ்தூபியும்
நாற்திசைப் பார்த்திருக்கும் நந்தி(கள்) மாடமும்



பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்



திருக்கோவிலின் தெப்பக் குளம்





திருச்செந்தூர்




கனகவேல் காக்க



அண்ணன் உலாப் போகும் நேரம்


குளித்து முடித்து வெளியில் கிளம்பக்
குஷியாய் போடுகிறார் ஆட்டம்

*** *** ***


தம்பிக்கு ஓய்வு நேரம்


கழுத்து மணிகள் கழற்றி ஆணியில் போட்டாச்சு
‘தூங்கலாமா’ கண்கள் சுழற்றி சிந்தனை வந்தாச்சு
*** ***


கடலருகே அலையலையாய் பக்தர்கூட்டம்


சுற்றிவரும் பிரகாரம்



எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

திங்கள், 21 டிசம்பர், 2009

பவனி


பளபளக்கும் பட்டுடையும்
மினுமினுக்கும் நகைநட்டும்
சரிகை இழையோடும்
தலைப்பாகையுமாய்..
அலங்கரித்த
வெண்புரவிகளில்
கம்பீரமாய் பெருமிதமாய்
அரசத்தம்பதியர் வீற்றுவர
கண்நூறுதான் கண்டுமகிழ..

ஊர்உலா முடிந்து
உடைமாற்றி நகை களைந்து
நின்றார்கள் கூலிக்கு
இன்றாவது கிடைக்குமாவென..

கனைக்காத குதிரைக்குக்
கால்களாய் இருந்த
களைப்பு மிகுதியில்
ராஜாவும்..
செழிக்காத கலைக்குச்
சேவகியாய்-
மெய் வருத்திப்
பொய்க் களிப்புடன்
பவனிவந்த ராணியும்!
***



படம் நன்றி: வடக்கு வாசல்
[இக்கவிதைக்காகவே ஓவியர் சந்திர மோகன் வரைந்தது].


  • 'வடக்கு வாசல்' பத்திரிகையின் டிசம்பர் 2009 இதழிலும் மற்றும் அதன் இணைய தளத்திலும் வெளிவந்துள்ள கவிதை.



ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ஏக்கம்


விருந்தினர் வருகை
நாளெல்லாம் வேலை

'இன்று வகுப்பிலே..'
'பக்கத்து வீட்டு நாய்க்குட்டி..'
'இந்த வீட்டுக்கணக்கு..'

முடிக்கும் முன்னரே
ஒவ்வொரு முறையும்
'அப்புறமாய் சொல்லுடா'
அன்பாய் தலைகலைத்து
அவசரமாய் அடக்கிவிட்டு

வந்தவர்க்ளைக் கவனித்து
வழியனுப்பி வைத்தபின்
திரும்பிப் பார்த்தால்
உறங்கிப் போயிருந்தது
குழந்தை
பொம்மையை இறுக
அணைத்தபடி

விலகியிருந்த அதன்
போர்வையைச்
சரி செய்தவளை
ஏக்கமாய்ப்
பார்த்துக் கொண்டிருந்தது
மடிப்புக்கலையா அழகுடன்
பிரிக்கப்படாமல் கிடந்த
அன்றைய செய்தித்தாள்.
***

படம்: இணையத்திலிருந்து..

* உரையாடல் கவிதைப் போட்டிக்கு..
* 9 ஆகஸ்ட் 2010 ‘உயிரோசை’ இணைய இதழிலும்..
* ‘பொம்மையம்மா’வாக ஆனந்த விகடனின் சொல்வனத்திலும்..

வியாழன், 3 டிசம்பர், 2009

தேவதையும் முத்துச்சரமும்

தேவதையின் கழுத்தினை அலங்கரித்தபடி இருக்கப் போகிறது 'முத்துச்சரம்', டிசம்பர் 1-15 வரையில் :)!

மாதமிருமுறையாக கடந்த ஜூலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் பெண்களுக்கான பத்திரிகைதான் தேவதை:



தன்னம்பிக்கை மிளிரும் பெண்களையும், சாதித்து வரும் மகளிரையும் ஒருபக்கம் முன் நிறுத்தி வரும் தேவதை [இந்த இதழின் அட்டையில் அறிவிப்பாகியிருக்கும் சாதனைப் பெண்மணி நம் ரம்யா தேவி], சமையல் வீட்டுக்குறிப்புகள் ஆன்மீகம் கோலங்கள் கைவேலை ஷாப்பிங் ஃபேஷன் ஷேர்மார்க்கெட் என எதையும் விட்டு வைக்காமல் எல்லா வயது மற்றும் துறையைச் சேர்ந்த மங்கையரையும் கவருவதாக இருக்கிறது.

வ்வொரு இதழிலும் 'வலையோடு விளையாடு' எனகிற பகுதியில் ஒரு பெண் வலைப்பதிவரை அறிமுகப்படுத்தி வருகிறது. அப்பதிவரின் பல இடுகைகளிலிருந்து தனது வாசகர்களை சுவாரஸ்யப் படுத்தக் கூடியவற்றைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறது. அந்த வரிசையில்தான் இந்த இதழில் நான்:



[கடந்த வருட மெகா PiT போட்டியில் முதல் சுற்றுக்குத் தேர்வான
கடற்கரை சூரியோதம் மேலிரண்டு பக்கங்களுக்கும் பின்னணியாக..]
ல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என அதனைத் திறம்பட நிர்வகித்தபடி, மற்றவர் சாதிக்க உறுதுணையாகவும், நிதி மதி இன்னபிற இலாகா மந்திரிகளாகவும் இயங்கி வருகின்ற இல்லத்தரசிகளுக்கும்..

அலுவலகம் வெளியுலகம் வீடு எனக் கால்களில் கழட்டி வைக்க நேரமே இல்லாத சக்கரங்களுடன் சுழன்றபடி அதை சிரமமாகவும் நினைக்காமல் சவாலாய் அழகாய் பேலன்ஸ் செய்துகொண்டு வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தவாறே இருக்கும் பெண்களுக்கும்..

தாமும் தமது எண்ணங்களை கருத்துக்களை அனுபவங்களை சுதந்திரமாக முன் வைக்க இப்படி ஒரு களம் இருப்பதைக் கண்டு கொள்ள வைக்கும் முயற்சியாகவும் இருக்கின்றது தேவதையின் 'வலையோடு விளையாடு'. இதனால் பல வலைப்பூக்கள் மலருமென நம்புவோம். வாழ்த்தி அவற்றை வரவேற்போம்.

முத்துச்சர அறிமுகத்துக்கு மனமார்ந்த நன்றிகள் தேவதை!
***

திங்கள், 23 நவம்பர், 2009

மறுகூட்டல்


றுபடி மறுபடி கூட்டிப் பார்த்தான் குணா. எத்தனை முறை கூட்டினாலும் தொன்னூற்றெட்டே வந்தது. ஆசிரியரோ முதல் பக்கத்தில் நூற்றுக்கு தொன்னூற்றைந்து என பெரிதாக வட்டமிட்டுக் காட்டியிருந்தார்.

'தப்பு விட்டதோ ஒரே ஒரு ரெண்டு மார்க் கணக்கில். ஒருவேளை எதேனும் ஒரு கேள்வியை விட்டிருப்பேனோ?' வினாத்தாளை வைத்துக் கொண்டு பார்த்தால், அப்படியும் தெரியவில்லை.

சரியெனப் பக்கத்திலிருந்த பாலனிடம் கொடுத்துக் கூட்டிப் பார்க்கச் சொன்னான்.

பாலன் திணறித் திணறி இரண்டு முறை சரி பார்த்ததிலும் அதே தொன்னூற்றெட்டு. “போடா, போய் உடனே சார்கிட்டே சொல்லு. கூட்டலிலேதான் தப்பு!” என்று திருப்பிக் கொடுத்தான்.

அவசரப் படாமல் கவனமாய் இன்னொரு முறை பக்கம் பக்கமாய்ப் பார்த்தான் குணா. எல்லா விடைகளுக்கும் அவற்றின் இடப்பக்கத்தில் மதிப்பெண் இட்டிருந்த ஆசிரியர், நான்காம் பக்கத்தில் கடைசியாய் இருந்த கணக்குக்கு அதன் அடியிலே மூன்று எனச் சுழித்து விட்டிருந்தார். புரிந்து போயிற்று மூன்று மதிப்பெண்கள் எப்படிக் ஆற்றோடு போயிற்று என.

"என்னடா நீ சொல்றியா, இல்லே நான் சொல்லட்டுமா?” எழ எத்தனித்த பாலனை இழுத்து அமரவைத்தான் குணா.

”உனக்கென்ன பைத்தியமா? நீயும் சொல்ல மாட்டேன்கிற. என்னையும் விட மாட்டேன்கிற. பாரு அந்தப் பயலை. மொத மார்க்குன்னு கைதட்டல வாங்கிட்டான். இந்த மூணு மார்க்கால உன் க்ளாஸ் ராங்க்குமில்லே ரெண்டாவதாகுது?”

“தெரியும், போகட்டும் விடு” என்றான் முன் வரிசையில் வானத்தில் மிதக்கிற மாதிரி அமர்ந்திருந்த சரவணனைப் பார்த்தவாறே.

"கணக்கில முதல்னதுக்கே தலைகால் புரியல. ரேங்க கார்ட் வாங்கும் போது ரெண்டு கொம்பே மொழைச்சிடும்" முணுமுணுத்தபடியே இருந்த பாலனை சட்டை செய்யவில்லை குணா.

ப்போது மணி அடித்தது.

“எல்லோரும் மார்க்குகளைச் சரி பார்த்தாச்சா? நாளைக்கு ஆன்சர் பேப்பரில் மறக்காம வீட்டிலிருந்து கையெழுத்து வாங்கிட்டு வந்திடணும். ரிப்போர்ட் கார்ட் இன்னும் இன்னும் ரெண்டு நாளிலே ரெடியாகிடும்” எழுந்தார் வகுப்பாசிரியராகவும் இருந்த கணக்கு ஆசிரியர்.

"சார் நம்ம குணா..." எனத் தாங்க மாட்டாமல், கூவியபடி துள்ளி எழுந்தே விட்டான் இப்போது பாலன்.

அவன் கையை இறுகப் பிடித்தான் குணா. அந்த இரும்புப் பிடியிலும் நெருப்புப் பார்வையிலும் ஆடித்தான் போனான் பாலன். பால்ய காலத்திலிருந்து சிநேகிதனாய் இருப்பவனின் செயல், புரிந்து கொள்ள முடியாத தடுமாற்றத்தைத் தந்தது.

“குணாவுக்கு என்ன?” கேட்டார் ஆசிரியர்.

பாலன் திணறி நிற்க, “ஒண்ணுமில்லே சார். அம்மாவும் அப்பாவும் ஒரு கலியாணத்துக்கு வெளியூர் போயிருக்காங்க. கையெழுத்து உடனே வாங்க முடியாதே” சாதுவாகச் சமாளித்தான் குணா.

”சரி, அதனாலென்ன. இது ரிப்போர்ட் கார்ட் இல்லையே. உன் அண்ணன் குருவிடம் வாங்கிட்டு வா, பரவாயில்லை” எனச் சிரித்தார் ஆசிரியர்.

குரு அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு. படிப்பில் சூரப்புலி. பள்ளியின் மாணவர் தலைவனும் என்பதால் அவனைத் தெரியாதவர் கிடையாது.

ஆசிரியர் வெளியேற, மாணவர்கள் பைகளைக் கட்ட ஆரம்பித்தார்கள். குணா எழுந்து சென்று சரவணனின் கைகளைப் பற்றிக் குலுக்க அதைச் சற்றும் எதிர்பாராதவனாய் சந்தோஷத்தில் நெளிந்தான் அவன்.

வாசலில் பையோடு முறைத்தபடி நின்றிருந்த பாலனை நெருங்கி அவன் தோள் மேலே கைபோட்டபடி அழைத்துச் சென்றான் சமாதானமாக. கைகள் விலக்கப்பட்ட வேகத்தில் தன் மேலான கோபம் தீரவில்லை அவனுக்கு எனப் புரிந்தது.

ருவரும் பள்ளியின் சைக்கிள் ஸ்டாண்டை அடைந்தபோது வழக்கம் போல அண்ணன் குரு தயாராக ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றியபடி சைக்கிள்மேல் காத்திருந்தான் அவனை டபுள்ஸில் அழைத்துச் செல்ல.

“என்னடா கணக்கு பேப்பர் வந்திடுச்சா?”

“தொன்னூத்தஞ்சு”

“போ! அஞ்சு மார்க் கோட்டை விட்டுட்டியா? அப்போ ரேங்க்?”

“அநேகமாய் செகண்டுதான்”

“இருந்திருந்து நைன்த் ஃபைனலில் இப்படி சறுக்கிட்டியேடா!”

“ஆனைக்கும் அடி சறுக்கும்ங்கிற கதையில்ல தலைவா இது. தானே தலையிலே மண் வாரிப் போட்டுக்கும்ங்கிற கத”

தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அங்கு வந்த பாலன், தங்கள் மாணவர் தலைவனிடம் நடந்ததை விளக்கி, பொங்கிக் கொண்டிருந்த மனதை, போட்டுக் கொடுத்து ஆற்றிக் கொண்டான்.

"முட்டாளா நீ? பெரிய தியாகச் செம்மல்னு நினைப்போ?”

"அய்யோ அப்படில்லாம் இல்லேண்ணா. வீட்ல சொல்லிடாதே. பாரு அவன் இதுவரை என்னை முந்தினதே இல்லை. கைதட்டலும் முதல் மார்க்கும் எப்பவும் எனக்கேதாங்கிற மாதிரி ஆயிடுச்சு. என்னைவிட ஓரிரு மார்க்குதான் கம்மியா வாங்கிருப்பான். அதுவும் நல்ல மார்க்தான்னாலும் பேப்பரை கையில வாங்கும்போது அவன் சந்தோஷப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

இந்த முறை முதலாவதுன்னு சார் சொன்னதும் அவன் முகத்துல இருந்த ஆனந்தத்தைப் பார்க்கணுமே. அதுவுமில்லாம எனக்கு சொல்லித் தர வீட்ல நீ இருக்கே. அக்கா, அம்மா, அப்பா இருக்காங்க. அவன் அம்மாப்பா சாதாரண கூலி வேலை செய்யறவங்க. இனித் தன்னாலேயும் முடியுங்கிற நம்பிக்கையோடு பத்தாவது க்ளாஸிலே இன்னும் நல்லாப் பண்ணுவான். அவன் குடும்பமே அவனை நம்பித்தானேண்ணா இருக்கு."

நண்பனைப் பார்த்து பிரமித்து நின்றிருந்தான் பாலன்.

குருவோ சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி விட்டு அப்படியே சகோதரனை இறுகக் கட்டிக் கொண்டான்.

மறுகூட்டலில் மதிப்பெண்களை மட்டும் கூட்டிப் பார்க்காமல் எத்தனை விஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்திருக்கிறான் தன் தம்பி என நினைக்க நினைக்க அவனுக்குப் பெருமையாக இருந்தது.
***

படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்











புதன், 18 நவம்பர், 2009

பூக்கள்- PiT Nov 09

போட்டித் தலைப்பூ வாண்டுகள்!
அழகழகாய் தந்தாச்சு பூச்செண்டுகள்.
**
இப்பூடியும் கேப்பாரு அப்பூடியும் கேப்பாரு!
குறும்பூ
நான் என்ன இன்னொரு ஐஸ்க்ரீம் வேணும்ன்னா கேட்டேன்? பலூன்தானே கேக்கறேன்”னு
இங்கே சமர்த்து பண்ணும் 'ட்விங்கிள் ட்விங்கிள்' லிட்டில் ஸ்டாரு...

நான் என்ன டாய் வேணும்ன்னா கேட்டேன்? ஸ்வீட் தானே கேக்கறேன்”னு 'தடாலடி'யும் பண்ணுவாரு,
பாருங்க இங்கே :))!


அரும்பூ

புன்னகைக் கீற்றுடன்
புத்தரைப் பின்பற்றி..



களிப்பூ

உயரப் பறக்கும் பலூனின் பிடி
உள்ளங்கையில் இருக்கும் பரவசத்தில்..

சுறுசுறுப்பூ
ஏறி விளையாடு(ம்) பாப்பா




இரண்டும் நாலும் மீள்படங்களாய் பார்வைக்கு.
மாஸ்டர் குறும்பூ போகிறார் போட்டிக்கு.













புதன், 11 நவம்பர், 2009

வெற்றியில் கிறக்கம் [யூத்ஃபுல் விகடனின் முதல் மின்னிதழில்]


லக்கைத்
தொட்டு விட்ட
புள்ளியில் நின்று
தன்னை மறப்பதும்
தற்பெருமை பேசுவதும்
சிறையில் இருப்பவன்
அறையின் விசாலத்தை
சிலாகிப்பதாகாதா?

டைந்த உயரம்
அளிக்கலாம் ஊக்கம்
ஆனால் அதுவே
தரலாமா தலைக்கனம்?
பரந்தது உலகம்
உணர்வது முக்கியம்;
வெற்றியில் கிறக்கம்
வீழவும் வைக்கும்.

த்தனை நேரம்தான்
ஏந்தியே நிற்போம்?
கிடைத்த கோப்பையை
கீழே வைத்துவிட்டு
வந்த பாதைக்குஒரு
வணக்கம் சொல்லிவிட்டு
இந்தப் பக்கம்
திரும்பினால்தானே-
தென்படும் தூரத்தே..
சவாலாய் நமக்குக்
காத்திருக்கின்ற
அடுத்த இலக்கு?!
*** *** ***


ந்வம்பர் 2009 மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டுங்கள்.




ஹலோ நான்தாங்க:

முத்துச்சரம் தொடுக்க ஆரம்பித்து சரியாக ஒன்றரை ஆண்டுமுடிந்த நிலையில் சமீபத்தில் தொடருபவர் எண்ணிக்கை சதத்தைத் தாண்டி இருக்கிறது. கடந்த பதிவில் "நூறாவது நபராய் தொடர்வது சந்தோஷமாயிருக்கிறது." என்று பின்னூட்டமிட்டிருந்த பிரபாகருக்கும், அதைத் தொடர்ந்து அங்கே வாழ்த்தியிருந்தவர்களுக்கும், தொடர்கின்ற 102 பேருக்கும், follower ஆக இல்லாமலும் தொடர்ந்து வாசித்து வருபவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! தொடர்கின்ற உங்கள் ஆதரவுடன் தொடரும் என் பயணமும்...



வெள்ளி, 30 அக்டோபர், 2009

சிரிக்கும் சீனப் புத்தர்



கொள்ளைச் சிரிப்பில்
உள்ளம் தொலைத்து,
வரவேற்பரையை
அலங்கரிக்கவெனக்
கொண்டு வைத்தாலும்-
உழைப்பவர் வீடெனில்
அதிர்ஷடப் பொம்மையாய்
அருள்புரிவார் அங்கு
அழகாய்ச் சிரித்தபடி புத்தர்!

கொள்ளை கொள்ளையாய்
கொட்டும் பணமென
வாங்கி வைத்துவிட்டு-
உறங்குபவர் வீட்டிலோ
அலங்காரப் பொம்மையாகவே
வீற்றிருப்பார் என்றும்
எள்ளி நகைத்தபடி புத்தர்!
*** *** ***


இரண்டு வரி வாசகமாய் 'பொம்மை[அக்டோபர் PiT]' இடுகையில் நான் பதிந்த கருத்து, பதிவர் கோமாவின் பின்னூட்டக் கேள்வியால் ‘க்ளிக்’ கவிதையாய் மலர்ந்து விட்டுள்ளது 28 அக்டோபர் 2008 யூத் விகடனில். நன்றி கோமா!

இக்கவிதைக்கு விகடன்.காம் முகப்பிலும் இணைப்பு தரப் பட்டுள்ளது. நன்றி விகடன்!














2-4/11 யூத்ஃபுல் விகடனின்
‘அதிகம் படித்தவை’ பட்டியலிலும்:

செவ்வாய், 27 அக்டோபர், 2009

இன்றின் கணங்கள் [இலக்கியப்பீடம் இதழில்..]


வெளிச்சத்தில் காணநேரும்
ஒளிச் சிதறல்களோ
விளக்கு அலங்காரங்களோ
ஆச்சரியம் அளிப்பதில்லை.
அற்புத உணர்வைக்
கொடுப்பதுமில்லை.
இருளிலேதான் அவை
உயிர்ப்பாகி ஜொலிப்பாகி
உயர்வாகத் தெரிகின்றன.

வாழ்வின் வசந்தகாலத்தில்
வாசலில் விரிந்துமலர்ந்து
சிரிக்கின்ற
வண்ணக் கோலங்கள்
எண்ணத்தை நிறைப்பதில்லை
கண்ணுக்கும் விருந்தாவதில்லை.
பருவங்கள் மாறிமாறி
வரும் உலகநியதி
வாழ்வின்மீதான நம்
பார்வையையும் மாற்றிடத்தான்-
போன்ற
சிந்தனைகள் எழுவதில்லை,
சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.

இன்னல் எனும்ஒன்று
கோடை இடியாகச்
சாளரத்தில் இறங்குகையிலோ-
திறக்கின்ற சன்னலின்ஊடாகத்
திடுமெனப் புகுந்து
சிலீரெனத் தாக்கும்
வாடைக் காற்றாக
வாட்டுகையிலோதான்-
துடித்துத் துவளுகின்ற
கொடியாய் மனம்
பற்றிப் படர்ந்தெழும்
வழிதேடித் திகைத்து-
கவனிக்க மறந்த
இன்றின் சின்ன சின்ன
சந்தோஷக் கணங்களை
கவனமாய் உணர்ந்து-
சிலிர்த்துச் சிறகடித்துப்
பறக்கிறது வானிலே!
தவிர்க்க முடியாத
தவறும் இல்லாத
இயல்புதானே
இது வாழ்விலே!

*** *** ***

படம்: இணையத்திலிருந்து..



*அக்டோபர் 2009 இலக்கியப்பீடம் மாத இதழில்:



















இங்கு வலையேற்றிய பின் இக்கவிதை..

புதன், 21 அக்டோபர், 2009

தொழில்


ந்துருவுக்கு சந்தோஷமாக இருந்தது தன் தொழில் நேர்த்தியை நினைத்து. ஐந்து வருடங்களில் தனி ஆளாக இருபது முகமூடிக் கொள்ளைகள் நடத்தி விட்டான். ஏடிஎம், ஒதுக்குப் புறமான தனிவீடுகள், சிலபல கடைகளின் கல்லாக்கள் என அவன் கைவரிசை காவல்துறைக்குப் பெரும்தலைவலியாகவே இருந்து வந்தது. போலீசாரின் திறமையைப் புகழ்ந்து ஏதேனும் செய்தி பத்திரிகையிலோ தொலைக்காட்சியிலோ வந்தால் தாங்க முடியாத சிரிப்புத்தான் வரும் அவனுக்கு.

அன்றைய ப்ராஜக்ட்டையும் போட்ட திட்டம் இம்மியும் பிசகாமல் முடித்து விட்டிருந்தான். அவன் குறி வைத்தது ஒரு சின்ன நகைக் கடைக்கு. நகை என்று வந்து விட்டால் சின்னது பெரியது என்பதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? குண்டுமணி அளவேயானாலும் தங்கம் தங்கமாயிற்றே.

ஓரளவு அதிகமான போக்குவரத்துக் கொண்ட சாலை ஒன்றிலிருந்து பிரியும் சந்தின் முனையில் இருந்தது அந்தக் கடை. நேர் எதிரே பிள்ளையார் கோவில். அதுவும் காலை பத்து மணிக்கெல்லாம் நடை சாத்தி விடுவார்கள். கடையையும் கோவிலையும் விட்டால் அந்தச் சந்து முழுவதும் தனி வீடுகள். மதிய நேரம் ஆள் நடமாட்டமே இருப்பதில்லை.

ஒரு பக்கம் கலகலப்பான சாலை என்பதால் நகைக்கடை உரிமையாளர் காவலாளி ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. சரியாக இரண்டு மணியளவில் தனது நோஞ்சான் மச்சானின் பொறுப்பில் கடையினை விட்டுவிட்டு உரிமையாளர் சாப்பிடக் கிளம்பிச் சென்றால் திரும்புவதற்கு இரண்டு மணிநேரமாகும். கூட ஒரே ஒரு விற்பனைப் பெண்மணிதான். ஒருவாரமாக தினம் அந்த சமயத்தில் வந்து நின்று ஃபீல்ட் வொர்க் செய்தாயிற்று. பிள்ளையார் தும்பிக்கையை நீட்டிப் பிடித்தால்தான் உண்டு என நினைத்துக் கொண்டான் சந்துரு.

எதிர் திசையில் தன் பைக்கை நிறுத்தி விட்டு சாலையைக் கடக்க நிற்கையில் சரியாக ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது கடை முன்னே. ஒரு இளம் பெண்ணும், நடுத்தர வயதுப் பெண்மணியும் இறங்கினார்கள். சந்துரு அசரவில்லை. போட்ட திட்டம் நடந்தே ஆக வேண்டும். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கத்தான் ப்ரீஃகேஸில் சகல ஆயுதங்களும் இருக்கிறதே.

கடைக்குள் நுழையும் முன் தயாராக வைத்திருந்த முகமூடியை மாட்டிக் கொண்டவன், மடமடவென செயலில் இறங்கினான். தானியங்கிக் கதவாகையால் பிறர் சந்தேகத்துக்கு இடமின்றித் தாழிட எளிதாயிற்று. கல்லாவிலிருந்த நோஞ்சான் திடுக்கிட்டு சுகாதரிப்பற்குள் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திஹேண்ட்ஸ் அப்என்றான்.

அலாரம் எதையாவது அழுத்த நினைச்சே அவ்ளோதான். நான் சொல்றதையெல்லாம் ஒழுங்காக் கேட்டா நாலு பேருக்கும் உசுராவது மிஞ்சும். கூப்பாடு போடலாம்னு நினைச்சீங்க.. ஆளுங்க வருமுன்னயே அடுத்தடுத்து சுட்டுப்போட்டுட்டுப் போயிட்டேயிருப்பேன். இது சைலன்சர் பொறுத்தின துப்பாக்கி நெனப்புல இருக்கட்டும்என்றவன் விற்பனைப் பெண்மணியைப் பார்த்துதொற எம் பொட்டியஎன்றான்.

அதிலிருந்த கயிறுகளையும் துணிப்பந்துகளையும் அவளை விட்டே எடுக்க வைத்து வாடிக்கையாளர்கள் கைகளையும் நோஞ்சானின் கைகளையும் கட்டவைத்து வாயில் துணிப் பந்துகளைத் திணிக்கச் செய்தான்.

இப்ப ஒழுங்கு மரியாதையா ஷோகேஸில் இருக்கிற அம்புட்டு நகையையும் இதுலஅள்ளிப் போடல அப்புறம் ஒம் பொணத்ததான் இங்கிருந்து அள்ளிட்டு போக வேண்டியிருக்கும்எனப் பெட்டியைக் காட்ட நடுநடுங்கி அவன் சொன்னவாறே செய்தாள் அவள். காரியம் முடிந்ததும் ஏற்கனவே விதிர்விதிர்த்துப் போயிருந்த அந்தப் பெண்ணைக் கட்டிப் போடுவதும், வாயில துணியை அடைப்பதும் கஷடமாக இல்லை.

கொஞ்ச நேரத்துல ஒங்க முதலாளி வந்து அவுத்து விடுவாரு. வரட்டுமா கண்ணுங்களாஎன்றபடி யாரும் வருகிறார்களா எனக் கவனமாகப் பார்த்து விட்டு, வெளியேறும் சமயம் முகமூடியைக் கழட்டிக் கொண்டவன் பைக்கில் ஏறி சிட்டாய்ப் பறந்து வந்து விட்டான்.
*

என்ன மேடம் சொல்றீங்க. அவனை நேரில பார்த்ததே இல்லைங்கறீங்க. இப்பவும் உங்க யாராலேயும் முகத்தைப் பார்க்க முடியல. அப்புறம் எப்படி?" ஆச்சரியமாய்க் கேட்டார் ராம்.

ஆனால் வாடிக்கையாளராக மாட்டிக் கொண்ட பாமாவோ உறுதியாக இருந்தாள் அது அவன்தான் என்று.

இன்ஸ்பெக்டர் நான் சொன்ன தகவலை வச்சுக்கிட்டு உடனே அவனை வளைச்சுப் புடிக்க முடியுமான்னு முதல்ல பாருங்க. புடிச்ச பிறகு இதோ இந்த நம்பரில் என்னைக் கூப்பிடுங்க. பொண்ணு ரொம்ப பயந்து போயிருக்கா. இப்ப நான் கிளம்பறேன்என்றவள் மகளை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டியை நோக்கிச் செல்ல அவளை தடுக்க விரும்பவில்லை ராம்.

அங்கே குண்டு இங்கே குண்டுஎன வரும் அனாமத்து தொலைபேசித் தகவல்களை எப்படி ஒதுக்க முடியாதோ அதே போல இதையும் எடுத்துக் கொண்டால் என்ன எனத் தோன்றிற்று. அது மட்டுமின்றி பாமாவின் உறுதி மேல் ஏற்கனவே ஒரு நம்பிக்கை படர்ந்து விட்டிருந்தது.
*

அடுத்த சில மணி நேரத்தில் பாமா வீட்டில் இருந்தார் ராம்.

உங்களை ஸ்டேஷனுக்கெல்லாம் அலைக்க வேண்டாமேன்னு நானே வந்துட்டேன் தேங்க் பண்ண. நீங்க சொன்ன ஏஜன்ஸியிலே போய் விசாரிச்சதுமே வீட்டு அட்ரஸ் கிடச்சுட்டு. மஃப்டியில் ரவுண்டு கட்டி நின்னு அவன் வீட்டுக்குள்ள நுழையும் போதேப் புடிச்சுட்டோம். நீங்க எப்பேர்பட்ட உதவி செஞ்சிருக்கீங்க தெரியுமா? எனக்கு அவார்டு கிடைக்கோ இல்லையோ, நிச்சயமா உங்களுக்கு ரிவார்டு வாங்கிக் கொடுப்பேன்.”

அதெல்லாம் வேண்டாம். ஒரு சிட்டிசனா என் கடமையைத்தானே செஞ்சேன்.”

இருந்தாலும் க்ரேட் நீங்க. அவனோட மெயின் தொழிலு கொள்ளை. ஆனா, ஊரோட பார்வைக்கு அப்பாவியாக் காட்டிக்க ஒரு தொழில். என்னா கில்லாடிங்கறீங்க! சரி, இப்பவாவது சொல்லுங்க எப்படி அவனை கைகாட்டினீங்கன்னு..”

இன்ஸ்பெக்டர், அந்த ஏஜன்ஸியிலிருந்து கடந்த அஞ்சு வருஷமா எங்க கம்பெனிக்கு சப்ளையரா இவன்தான் வந்துட்டிருக்கான். முதல்ல இதக் கேளுங்க. நான் பத்து வருஷம் முன்னே மும்பையில் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ஒருத்தர் ஏதோ விஷயமாய் எங்க மேனஜர்ட்ட பேச ஃபோன் போட்டார். அவர்ஹலோன்னு சொன்ன அடுத்த செகன்ட் . ‘யெஸ் அருண்ன்னு பேரைச் சொல்ல அசந்தே போயிட்டார். அதுபோலத்தான் அவன்ஹேண்ட்ஸ் அப்ன்னதுமே எனக்குப் புரிஞ்சு போச்சு..”

அங்கே சிறையில் சந்துருவுக்கு, ‘எங்கேடா வச்சிருக்க முன்ன கொள்ளையடிச்சதையெல்லாம்எனக் கேட்டு போலீஸ் தன்னைச் செய்ய போகிற சித்திரவதையை விட, ‘எப்படி எப்படி எப்படி மாட்டினோம்என்கிற சிந்தனையே மிகப் பெரும் சித்திரவதையாய் இருக்க..

இங்கே இன்ஸ்பெக்டர் ராம், பாமா சொல்வதை வியப்பு அடங்காமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

நீங்கன்னு இல்ல, பொதுவா எல்லோருமே ஒரு ஆளைக் கண்ணால பார்த்து உள்வாங்கித்தான் அடையாளம் கண்டுக்கறீங்க. ஆனால் என்னை மாதிரியானவங்க காதால குரலை உள்வாங்கினாலே ஆளைத் தெரிஞ்சிடும்.”

இப்போது ராமின் முகத்திலிருந்த வியப்பு குழப்பமாக மாறுவதைக் கவனித்த பாமா சிரித்தாள்.

ஏன்னா அது எங்க தொழில் இன்ஸ்பெக்டர். இருபது வருஷமா டெலிஃபோன் ஆப்பரேட்டரா இருக்கேன்.”

***
*** *** ***

படம்: இணையத்திலிருந்து...



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin